முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சென்னை, கோவை மாநகராட்சிகளில் வழங்கிய டெண்டரில் முறைகேடு செய்ததாக,
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கை விடுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் 2021ல் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து,
வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம்சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதேபோல் டெண்டரில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த வழக்குகளை 2022 நவம்பர் 20ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள்,
பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, டெண்டர் பணிகளில் முறைகேடு தொடர்பான புகாரில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் வேலுமணி மீதான வழக்கில் தொடர்புடைய எம்.எஸ். கன்ஷ்ட்ரக்சன் இன்ஃப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு, ஆலயம் ஃபவுண்டேஷன், வைதூரியா ஹோட்டல், கண்ஷ்ட்ரோ மால் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.
அதில், “எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது, அவர் பொது ஊழியர், அவருக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதால் தங்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த நிறுவனங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய எதிர்ப்புத் தெரிவித்து அறப்போர் இயக்கம் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.
அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ்,
“இந்நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறது” என்று வாதாடினார்.
அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி,
“இவ்வழக்கில் இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இதை இன்று (ஆகஸ்ட் 2) விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி ஐந்து நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதோடு, லஞ்ச ஒழிப்புத் துறை ஆறு வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
பிரியா
இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை “ஹர்காரா”
அப்பாவிகளை சுட்டுக் கொன்ற ஆர்.பி.எஃப் வீரர்… மன நோயாளியா? மதவாத நோயாளியா?
“டைகர் நாகேஸ்வர ராவ்” ரிலீஸ் தள்ளிப்போகிறதா? – படக்குழு விளக்கம்!