கெஜ்ரிவாலின் பிரதமர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இடைக்கால ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இந்தியா கூட்டணிக்காக பிரச்சாரம் செய்யவுள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் இன்று (மே 11) மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக தாக்கி பேசினார்.
அவர் கூறுகையில், “இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று பாஜக கேட்கிறது. நான் அவர்களைப் பார்த்து கேட்கிறேன், பாஜக பிரதமர் வேட்பாளர் யார். மோடிக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதியுடன் 75 வயதாகிறது.
2014ல் 75 வயதுக்குட்பட்டவர்கள் பாஜகவில் ஓய்வு பெறுவார்கள் என்ற விதியை அவரேதான் கொண்டு வந்தார்.
எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் ஆகியோர் ஓய்வுபெற்றுவிட்டனர்.
மோடியும் அடுத்த வருடம் ஓய்வு பெற்றுவிடுவார். அமித்ஷாவை பிரதமராக்க மோடி வாக்கு சேகரித்துகொண்டிருக்கிறார். மோடியின் உத்தரவாதத்தை அமித் ஷா நிறைவேற்றுவாரா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
கெஜ்ரிவாலின் பேச்சுக்கு ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “75 ஆண்டு கால வரம்பு என எதுவும் பாஜகவின் அரசியலமைப்பில் இல்லை.
அடுத்த பிரதமர் பதவிகாலத்தையும் மோடிதான் முழுமையாக முடிப்பார். அவர்தான் இந்த நாட்டை வழிநடத்த போகிறார்.
பாஜகவில் எந்த குழப்பமும் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்தது தவறு என்று உச்ச நீதிமன்றத்தின் முன் மன்றாடினார்.
ஆனால் உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. ஜூன் 1ஆம் தேதி வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 2ஆம் தேதி அவர் சரணடைய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தேர்தல் ஆணையம் மிரட்டுகிறது – கார்கே
IPL 2024: ரிஷப் பண்ட்டிற்கு ஒரு போட்டியில் விளையாட தடை!