மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை அணியும் போது வித்தியாசமான வீரராக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி தேல்வி அடைந்தது .
முன்னதாக இத்தொடரில் சூர்யகுமார் யாதவ் 3 போட்டிகளிலும் டக் அவுட் ஆனது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதேநேரம், டி20 கிரிக்கெட்டில் கடந்த 2 வருடங்களாக சிறப்பாக விளையாடி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.
குறிப்பாக எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் புது புது ஷாட்டுகளால் அற்புதமாக பேட்டிங் செய்யும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கிரிக்கெட் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகிறார்கள்.
அப்படிப்பட்ட தரமான வீரரான அவர் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டு இதுவரை விளையாடியுள்ள 23 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காமல் 24.06 என்ற சுமாரான பேட்டிங் சராசரியில் விளையாடி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
அதிலும் சொந்த மண்ணில் நடைபெற்ற இத்தொடரில் ஒரு பந்தை கூட அடிக்காததால் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு செட்டாக மாட்டார் என்று சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யும் ரசிகர்கள் சஞ்சு சாம்சன் போன்ற இதர வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31 துவங்க உள்ள நிலையில் மும்பை அணிக்காக அபாரமாக செயல்பட்டு தன் மீதான சந்தேகத்தை சூர்யகுமார் யாதவ் உடைப்பார் என்று தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி நேற்று (மார்ச் 23 ) Cricbuzz இணையதளத்தில் பேசிய தினேஷ் கார்த்திக், “டக்கவுட் ஆவது ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் 3-வது முறையாக டக் அவுட்டான போது தொலைக்காட்சியில் அதை அஜித் அகர்கர் வர்ணனை செய்ததை நினைவில் கொள்ள வேண்டும்.
அஜித் அகர்கர் இதே போன்ற தருணத்தை தனது கேரியரில் சந்தித்ததை போல அனைத்து பேட்ஸ்மேன்களும் இந்த மோசமான தருணங்களை கடந்து வந்துள்ளார்கள். இருப்பினும் தற்போது அனைவரும் சூர்யகுமாருக்காக பரிதாபப்படுகிறார்கள். ஏனெனில் அவரிடம் அற்புதமான திறமை இருக்கிறது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக், “ டி20 கிரிக்கெட் வித்தியாசமானது. அதில் அவர் சிறப்பாக செயல்படக் கூடியவர். எனவே அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை அணியும் போது வித்தியாசமான வீரராக செயல்படுவார்.
குறிப்பாக இந்த வகையான கிரிக்கெட்டில் தான் நாம் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்காகவும் 2 வருடங்களாக அசத்தி வருகிறோம் என்பதை அவர் உணர்வார். அதே சமயம் 4வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபிட்டாக இல்லாத பட்சத்தில் அதை சரி செய்வதற்கு இந்திய அணி நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
“ஒருவேளை அவர் ஃபிட்டாக இருந்தால் அவர் தான் அந்த இடத்தில் விளையாடுவதற்கு தகுதியானவர். இல்லையேல் சூர்யகுமார் யாதவ் தடுமாறும் நிலையில் வேறு எந்த வீரரை களமிறக்கலாம் என்பதை அவர்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் சொதப்பி வரும் சூர்யகுமார் யாதவ், இப்போது தினேஷ் கார்த்திக் சொன்னபடி மும்பை இந்தியன்ஸின் ஜெர்சியை அணிந்த பின் ஐபிஎல் போட்டிகளில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பர்க்க வேண்டும். அதற்காக ஒருநாள் போட்டிகளிலும் சென்டிமென்ட்டாக மும்பை இந்தியன் ஜெர்சியை அணிந்துகொள்ள முடியுமா? திறமை உடையில் இல்லை உள்ளே இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அஜித்தை ’தல’ ஆக்கிய rebel தந்தை: யார் இந்த மணி?
கிரிமினல்களுக்கு அமைச்சரவை… எதிர்க்கட்சியினர் தகுதிநீக்கம்! – மம்தா பானர்ஜி