flipkart delivering same day
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் ஒரே நாளில் டெலிவரி என்னும் புதிய வசதியை அறிமுகம் செய்யவிருக்கிறது.
குறைந்த விலை, ரிட்டர்ன் வசதி, வீடு தேடி வந்து டெலிவரி செய்வது ஆகிய காரணங்களால் இ-காமர்ஸ் நிறுவனங்களில் பொருட்களை ஆர்டர் செய்வோரின் எண்ணிக்கை, நாளுக்குநாள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.
தற்போது அமேசான், பிளிப்கார்ட், மீஷோ,மிந்த்ரா என பல்வேறு இ-காமர்ஸ் தளங்கள் இந்தியாவில் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பொருட்கள் வாடிக்கையாளர்களால் ஆர்டர் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் இந்திய நிறுவனமான பிளிப்கார்ட் பொருட்களை ஆர்டர் செய்த ஒரே நாளில், டெலிவரி செய்யும் வசதியை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய 2௦ நகரங்களில் தற்போது இந்த வசதி முதலில் நடைமுறைக்கு வரும் என்றும், விரைவில் அனைத்து நகரங்களிலும் இந்த டெலிவரி சேவை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேதி குறித்து பிளிப்கார்ட் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் பிப்ரவரி மாதத்தில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என பிளிப்கார்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முதல் கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, அகமதாபாத், டெல்லி, கவுகாத்தி, ஹைதராபாத், இந்தூர், புவனேஷ்வர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, லூதியானா, மும்பை, நாக்பூர், புனே, பாட்னா, ராய்ப்பூர், சிலிகுரி மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களில் இந்த வசதி அறிமுகமாகிறது.
ஒரே நாளில் டெலிவரி என்பதால் ஒரு நாளின் முதல் பாதியில் அதாவது மதியம் 1 மணிக்குள் பெறப்படும் ஆர்டர்கள் மட்டுமே அதே தினத்தில் டெலிவரி செய்யப்படும் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
அழகு சாதன பொருட்கள், மொபைல்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், புத்தகங்கள் என மாதமொன்றுக்கு சுமார் 12௦ மில்லியன் ஆர்டர்களை, பிளிப்கார்ட் நிறுவனம் டெலிவரி செய்து வருகிறது.
ஒரே நாளில் டெலிவரி வசதி நடைமுறைக்கு வரும் பட்சத்தில், ஆர்டர்களின் எண்ணிக்கை மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
கட்சிப் பதிவு… விஜய் கில்லி வேகம்: பின்னணியில் டெல்லி
flipkart delivering same day