சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல்துறை இன்று (மே 12) உத்தரவிட்டுள்ளது.
அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து தேனியில் சவுக்கு சங்கர் காரில் கஞ்சா இருந்ததாக வழக்கு, பத்திரிகையாளர் சந்தியா ரவிசந்தர், தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலெட்சுமி ஆகியோர் அளித்த புகார்கள் என சவுக்கு சங்கர் மீது 7 வழக்குகள் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுத்தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “சிஎம்டிஏ (CMDA) அதிகாரியின் புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் (எ) சவுக்கு சங்கர், 2/48, த/பெ.ஆச்சிமுத்து, மதுரவாயல், சென்னை என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, தற்போது கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மத்திய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், சங்கர் (எ) சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை, கோயம்புத்தூர் சிறையில் உள்ள சங்கர் (எ) சவுக்கு சங்கர் என்பவருக்கு இன்று (மே 12) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் சார்வு செய்யப்பட்டது.
அவர் மீது சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சங்கர் (எ) சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…