மொழித் தகராறு: வெளிமாநில ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அட்வைஸ்!

Published On:

| By Aara

ரயில் பயணிகள் மற்றும் சக ஊழியர்களிடம் உரையாட வசதியாக, இதர மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தமிழ் கற்றுக்கொள்ள தெற்கு ரயில்வே வலியுறுத்தியிருக்கிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவு மையம், ரயில் நிலையங்கள், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில், ரயில் நிலையங்களில் பணியாற்றும் இதர ரயில்வே ஊழியர்கள், தமிழக பயணிகளிடம் பேச முடியாமல், பயணிகள் அவதிக்குள்ளாவதைத் தடுக்கவே தெற்கு ரயில்வே இந்த திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
தற்போது தெற்கு ரயில்வேயில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றும் வெளிமாநிலத்தவர்களால் தமிழில் பேச முடியாமல் உள்ளது. பலரும் ஹிந்தி தான் பேசுகிறார்கள். இந்த நிலையில்தான், தெற்கு ரயில்வேயின் அறிக்கையில், பல்வேறு துறை தலைவர்களும், தங்களது வெளிமாநில ஊழியர்களுக்கு தமிழ் கற்பிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே, தெற்கு ரயில்வேயின் கீழ் வரும் பிற மாநிலங்களிலும், அந்தந்த உள்ளூர் மொழிகளை கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வித் துறையால் உருவாக்கப்பட்ட பாஷா சங்கம் என்ற மொபைல் செயலியைப் பயன்படுத்தி எளிதாக உள்ளூர் மொழிகளை கற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் விர்ச்சுவல் அகாடமி என்ற இணையதளத்தையும் பயன்படுத்தி ஊழியர்கள் தமிழ் கற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ரயில் பயணிகள், “பல ஆண்டுகளாக பணியாற்றும் வெளிமாநில ரயில்வே ஊழியர்கள் கூட தமிழ் கற்றுக்கொள்ளவில்லை. தெற்கு ரயில்வே ஏதேனும் பரிசுகள் அறிவித்து ஊழியர்களை தமிழ் கற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், முன்பதிவு மையங்களில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு, ஆங்கிலத்தில் பயணியின் பெயர்களை அச்சடிக்கத் தெரியவில்லை என்பதால் பயணிகள் பலரும் சிக்கலை சந்திக்க நேரிடுகிறது” என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel