நகரங்களில் நவநாகரீக வாழ்க்கையை வாழும் மக்களும் கூட கிராமத்து வாழ்க்கை முறையையும், கிராமங்களையும் விரும்புவார்கள்.
அந்த பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும் தொடர்ந்து தனது எண்ணங்கள் மற்றும் விருப்பங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருபவருமான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தான்.
அந்தவகையில் தற்போது தான் செல்ல விரும்பும் இந்திய கிராமங்கள் என்னென்ன என்பது குறித்தான தனது விருப்பத்தை அண்மையில் கூறியிருக்கிறார்
‘Colours of Bharat’ எனும் சுற்றுலா ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்த டாப் 10 இந்திய கிராமங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இந்த அழகிய இந்திய கிராமங்கள் என்னை வியக்க வைத்துவிட்டன. இந்தியாவில் பயணங்கள் செல்வதற்கான என் லிஸ்ட் இப்போது நிரம்பி வழிகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
அதில் இடம்பெற்ற 10 கிராமங்களையும் அதன் சிறப்புகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்:
கல்பா
இமாச்சலப்பிரதேசம் – சட்லஜ் நதிப் பள்ளத்தாக்கில் உள்ள கின்னௌரின் முக்கிய கிராமமான கல்பா பல அழகான கோவில்கள் மற்றும் மடங்களுக்கு பெயர் பெற்ற இந்த ஊர் அதன் ஆப்பிள் தோட்டங்களுக்கும் புகழ் பெற்றது.
மவ்லின்னாங்
மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங் இந்தியாவின் மிகவும் தூய்மையான கிராமமாக விளங்குகிறது.
கடவுளின் சொந்த தோட்டம் என்றும் அழைக்கப்படும், வசீகரிக்கும் மவ்லின்னாங் கிராமம் ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது!
கொல்லங்கோடு
கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களில் ஒன்றான கொல்லங்கோடு, எப்பொழுதும் இதமான வானிலையும், பசுமையும் நிறைந்த அழகிய கிராமமாகும்.
மாத்தூர்
தமிழ்நாடு – கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய கிராமமான மாத்தூர், குழந்தைகள் பூங்கா மற்றும் பல குளியல் தளங்களுக்கு பிரபலமானது.
இங்குள்ள மாத்தூர் தொட்டி பாலம் மிகப் பிரபலமானது.
வாரங்க
கர்நாடகா – உடுப்பி மாவட்டத்தில் உள்ள கார்கலாவில் இருந்து 26 கிமீ தொலைவில் உள்ள அழகிய கிராமமான வாரங்கா, வசீகரிக்கும் இடங்களுக்கு மத்தியில் அமைதியின் மடியில் ஓய்வெடுக்க சிறந்த வழியாகும். இங்குள்ள ஜெயின் கோவில் மிகப் பிரபலம்.
கோர்கே
நீங்கள் இமயமலையின் இணையற்ற அதிசயமான அழகை விரும்புபவராகவும், ஆராயப்படாததை அனுபவிக்கவும் விரும்பினால் – கோர்கேவிற்குதான் செல்ல வேண்டும்.
டார்ஜிலிங்கிற்கும் சிக்கிமிற்கும் இடையே அமைந்துள்ள இந்த அழகான கோர்கே ஒரு பள்ளத்தாக்கு கிராமமாகும்.
ஜிராங்
சந்திரகிரி என்று அழைக்கப்படும் ஜிராங், ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும், இது குறிப்பிடத்தக்க திபெத்திய மக்களைக் கொண்டுள்ளது.
கிராம வாழ்க்கையை அனுபவிக்கவும், வலிமைமிக்க கிழக்குத் தொடர்ச்சி மலைகளால் மயங்கவும் இங்கு வரலாம்.
ஜிரோ
அருணாச்சலப்பிரதேசம் – ஒரு தனித்துவமான பழங்குடியினரின் குடியிருப்பாக அழகான காலநிலையுடன் அமைதி தேடுபவர்களின் சொர்க்கமாக விளங்கும் ஜிரோ ஒரு வசீகரமான கிராமமாக விளங்குகிறது.
மானா
உத்தரகாண்ட் – இமயமலையில் இந்தியா மற்றும் திபெத்/சீனா எல்லையில் உள்ள கடைசி இந்திய கிராமம் மானா சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பனி மூடிய சிகரங்கள், புல்வெளிகள், வெள்ளி போன்று மின்னுகின்ற ஆறுகள் என மானா நம் மனதை திருடி விடும்.
கிம்சர்
ராஜஸ்தான் – நாகௌர் திருவிழாவிற்கு புகழ்பெற்ற கிம்சார், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய, அழகிய மற்றும் வண்ணமயமான கிராமமாகும்.
ஆனந்த் மஹிந்திரா வின் விருப்பமான கிராமங்களின் பட்டியலை தொடர்ந்து நெட்டிசன்கள் தங்களுக்கு பிடித்த அழகிய கிராமங்களின் பெயர்களையும் அதன் சிறப்புகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்