போலி இ-மெயில் விவகாரம் தொடர்பாக மாரிதாஸிடம் விசாரணை நடத்தப்பட்டது.
நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியராக இருந்த குணசேகரன் மற்றும் ஊடகத்தினருக்கு எதிராக மாரிதாஸ் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் குறித்து அந்த சேனலின் தலைமைக்கு புகார் அனுப்பியதாகக் குறிப்பிட்ட மாரிதாஸ், அதன் ஆசிரியர் வினய் சராவகியிடம் இருந்து மின்னஞ்சலில் பதில் வந்ததாகவும், தன்னுடைய குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் கூறி அந்த மின்னஞ்சலைக் காண்பித்தார். ஆனால், அது போலியானது என வினய் சர்வாகி தெரிவித்துவிட்டார்.
இதுதொடர்பாக நியூஸ் 18 சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாரிதாஸ் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள மாரிதாஸின் வீட்டில் சென்னை மாநகர் தொழில்நுட்பப் பிரிவு காவல் துறை கூடுதல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் காவல் துறையினர் கடந்த 2ஆம் தேதி சோதனை நடத்தினர்.
இதனிடையே விசாரணைக்கு ஆஜராகக் கோரி மாரிதாஸுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் மதுரையிலிருந்து சென்னை வந்த மாரிதாஸ், நேற்று (ஆகஸ்ட் 10) மாநகர ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் துணை ஆணையர் நாகஜோதி தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இ-மெயில் தொடர்பாகவே முழு விசாரணையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று மாலை விசாரணை முடிந்த நிலையில், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவருக்கு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
**எழில்**�,