கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாகி வரும் நிலையில், பதில் சொல்லுங்க மோடி என்ற ஹேஷ்டேக் மூலம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கச்சத்தீவு விவகாரம் முக்கிய செய்தியாக மாறி வருகிறது. முன்னதாக கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்.டி.ஐ மூலம் தகவலை பெற்றிருந்தார்.
‘கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்த்தது மூலம் நமது எல்லையை சுருக்கியது காங்கிரஸ். கச்சத்தீவு என்பது ஒரு சிறிய தீவு அதன் மீது எனக்கு மரியாதை இல்லை என்று நேரு தெரிவித்திருந்தார். கச்சத்தீவை கொடுத்ததில் திமுகவுக்கும் பங்கு உள்ளது. திமுகவும் துரோகம் செய்திருக்கிறது’ என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 1) தனது ட்விட்டர் பக்கத்தில், “கச்சத்தீவு பற்றிய புதிய விவரங்கள் வெளிப்பட்டு வருவதால், முற்றிலும் இரட்டை நிலைப்பாட்டை கொண்ட தி.மு.க.வின் வேடம் கலைந்துள்ளது” என்று கூறியிருந்தார்.
இதற்கு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல்… என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்?
2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?
இந்தியாவை 2020-ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?
கருப்பு பணத்தை மீட்பேன் என்று கடுகு டப்பாவிலும், சுருக்குப் பையிலும் எங்கள் மக்கள் சேமித்து வைத்திருந்த 500, 1000-த்தை பிடுங்கினீர்களே, கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?
ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த உங்களை CAG அறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?
அடுக்கடுக்காய் வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?
அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அடுக்கடுக்காக தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்டப் பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்?
வாழும் தமிழின் வளர்ச்சிக்கு பெரிதாக நிதி இல்லை, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு?
நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?
பதில் சொல்லுங்கள் மோடி” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Rain Update: ‘ஜில்லென ஒரு மழைத்துளி’… குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்!
எம்.பில் படித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை!