நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயில் பாதை ஊட்டியின் அழகை இன்னும் அதிகமாக எடுத்துக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மலைப்பாதையில் செல்லும் ரயிலில் பயணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் பாதையில் உள்ள அடர்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. சில இடங்களில் மண் சரிந்து தண்டவாளங்கள் மூடியது.
இதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, சுற்றுலா பயணிகளின் நலன்கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (மே 19), நாளை (மே 2௦) ஆகிய 2 நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மலை ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…