என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை: இதுவரை 8 பேர் கைது!

தமிழகம்

சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 2 கோடிக்கு மேல் கொள்ளையடித்த வழக்கில் 8 பேர் சிக்கியுள்ளனர்.

சென்னை முத்தியால்பேட்டை மலையப்பன் தெருவில் வசித்து வருபவர் ஜமால். இவர் பர்மா பஜார் பகுதியில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி ஜமால் வீட்டிற்கு வந்த ஒரு கும்பல் தங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டு கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக சோதனை நடத்த வந்துள்ளதாக கூறி செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு சோதனையிட்டுள்ளனர்.

Robbery impersonating NIA officers 8 arrested so far

பின்னர் பர்மா பஜாரில் உள்ள ஜமாலின் கடையிலும் இந்த கும்பல் சோதனை நடத்தி, வீடு மற்றும் கடையில் இருந்து 2 கோடியே 30 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஜமால் விசாரித்தபோது வந்தது என்.ஐ.ஏ அதிகாரிகள் இல்லை என்பது தெரியவந்தது.

இந்தநிலையில், தான் மோசடி செய்யப்பட்டது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஜமால் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையைத் துவங்கினர்.

மேலும், துறைமுகம் உதவி ஆணையர் வீர குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக ராயபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கேஸ் டெலிவரி பாயாக பணியாற்றி வரும் புஷ்பராஜ், வீரா (எ) விஜயகுமார்,

பல்லவன் சாலையைச் சேர்ந்த சப்பரம் தூக்கும் பணியாற்றும் கார்த்திக், பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வரும் தேவராஜ் மற்றும் ரவி ஆகிய 6 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

முன்னதாக போலீசார் நடத்திய விசாரணையில் பா.ஜ.க நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன் தான் இந்த கும்பலுக்கு மோசடிக்கான திட்டம் தீட்டிக் கொடுத்தது தெரியவந்தது.

Robbery impersonating NIA officers 8 arrested so far

குற்றவாளிகள் 6 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்ததால், அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

10 நாட்கள் காவல் கேட்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

வேலு உள்ளிட்ட 6 பேரை காவலில் எடுத்து விசாரணை செய்த போலீசார்,  பைசல் என்பவனை கைது செய்தனர்.

பைசல் அளித்த தகவலின்படி, கொள்ளை போன 2 கோடியே 30 லட்சம் ரூபாயில், 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சித்திக்கை தனிப்படை போலீசார் இன்று (டிசம்பர் 22) கைது செய்துள்ளனர்.

போலீசார் குற்றவாளிகளை நெருங்கும் நேரத்தில் அவர்களுக்கு தப்ப சித்திக் உதவியதும் அதன் மூலமாக குற்றவாளிகள் தப்பியதும் தெரியவந்துள்ளது.

கலை.ரா

எழுத்தாளர் ராஜேந்திரனுக்கு சாகித்திய அகாடமி விருது!

வரலாற்று தோல்வி… பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *