பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா, போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் இன்று (மே 1) சம்மனுக்கு பதில் அளித்துள்ளார்.
கர்நாடகாவின் ஹாசன் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணாவின் சர்ச்சை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
ஆபாச வீடியோக்கள் வெளியான ஏப்ரல் 26ஆம் தேதியே அவர் ஜெர்மனி சென்றதாக சொல்லப்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரஜ்வல் ரேவண்ணா முதல்முறையாக விளக்கமளித்துள்ளார்..
அதில், “தற்சமயம் நான் பெங்களூருவில் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிறப்பு விசாரணைக் குழுவிடம் எனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளேன். உண்மை விரைவில் வெல்லும்” என்று பிரஜ்வல் பதிவிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…