இந்தியாவில் நடைபெற்று ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒவ்வொரு அணிக்கும் தலா 2-3 லீக் போட்டிகளே மீதமுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
அதே வேளையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்குகிறது. அதில் விளையாட உள்ள அணி வீரர்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்திய அணி வீரர்களின் பட்டியலும் வெளியான நிலையில், மூத்த வீரரான விராட் கோலியின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் 6வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் களம் காண உள்ளார்.
இந்த நிலையில் விராட் கோலி குறித்து ஐசிசிக்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியுள்ள கருத்துகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர், ” எல்லா வடிவங்களிலும் இந்த தலைமுறையின் சிறந்த பேட்டர் விராட் கோலி தான் என்று நான் உணர்கிறேன். மேலும் அவர் உலகக் கோப்பை பதக்கம் தேவைப்படும் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். அவரிடம் ஏற்கெனவே ஒரு உலகக்கோப்பை பதக்கம் (2011) ஒன்று உள்ளது. அவர் அதில் திருப்தி அடையவில்லை.
அவர் மேலும் ஒரு உலகக்கோப்பை பதக்கத்திற்கு நிச்சயம் தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பதக்கம் வெல்ல யாரையும் விட நட்சத்திர வீரர் விராட் கோலி தகுதியானவர்” என்று கூறியுள்ளார்.
மேலும், “அவர் தனது ஆட்டத்தை நன்றாக புரிந்து வைத்துள்ளார். களத்தில் கடைசி வரை இருந்தால், அவர் இந்தியாவுக்காக ஆட்டத்தை வெல்லப் போகிறார் என்பது உறுதி, மேலும் பெரிய சந்தர்ப்பங்களில் அதனை ஏற்கெனவே பலமுறை செய்துள்ளார்.
எந்த சூழ்நிலைகளில் எப்படி பேட்டிங் செய்வது என்பது தெரியும்.. எந்த பந்து வீச்சாளர்களை தாக்குவது, எப்போது மீண்டும் தாக்குவது, ஆட்டத்தில் அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பது அவருக்கு தெரியும்.
கோலி ஒவ்வொரு முறை வலைபயிற்சியில் ஈடுபடும் போதும், ஒரு போட்டியில் விளையாடுவது போல் பேட்டிங் செய்வார். அதனை திரும்பத் திரும்ப அதை செய்கிறார். பல வீரர்களிடம் நான் அதைப் பார்த்ததில்லை. அதுதான் அவரது வெற்றிக்கு முக்கியமான காரணம்” என்று நினைக்கிறேன்” என்று யுவராஜ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
6 மாவட்டங்களில் இன்று கனமழை : வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்!
அதிகரிக்கும் வெப்பம்: சென்னையில் செயல்பாட்டிற்கு வந்த பசுமை பந்தல்!