தமிழகத்தில் இன்று (மே 20) 7 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இன்று (மே 20) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ. – 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை போன்ற 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மே 21) முதல் மே 26ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலும் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், நாளை (மே 21) தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை போன்ற 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு
இன்று முதல் மே 24ஆம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட குறைவாக அல்லது இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.
சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்ககூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று (மே 20) குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு இலங்கையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு : ரேபரேலியில் ராகுல் ஆய்வு!