கேரளாவில் ஐஏஎஸ் அதிகாரி கார் மோதி பத்திரிகையாளர் கே.எம்.பஷீர் உயிரிழந்துள்ளார். சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கிடராமன் மதுபோதையிலிருந்ததாக தெரியவந்துள்ளது.
மலையாள பத்திரிகையான சிராஜ் டெயிலி பத்திரிக்கையில் பணியாற்றி வந்தவர் கே.எம்.பஷீர் (35). இவரது வீடு மலப்புரத்தில் உள்ளது. நேற்று இரவு கொல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இன்று (ஆகஸ்ட் 3) அதிகாலை 1 மணியளவில் திருவனந்தபுரம் அருங்காட்சியகம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த கார் மோதியதில் பஷீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பஷீர் வாகனத்தின் மீது மோதிய நீல நிற வோல்க்ஸ்வேகன் கார். கொச்சியை பூர்விகமாகக் கொண்ட ஐஏஎஸ் அதிகாரி (சர்வேயர் இயக்குநர்) ஸ்ரீராம் வெங்கிடராமன் என்பவருடையது என்பது தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்த பத்திரிக்கையாளரின் உடல் திருவனந்தபுர மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த ஐஏஎஸ் அதிகாரி கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீராம் வெங்கிடராமன் மதுபோதையில் அதிவேகமாகக் காரை இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் மது அருந்தியிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் சம்பவத்தின் போது தான் காரை இயக்கவில்லை, தன்னுடன் வந்த தோழி வாஃபா தான் காரை இயக்கியதாக ஸ்ரீராம் வெங்கிடராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள திருவனந்தபுர நகரக் காவல் ஆணையர் தினேந்திர கஷ்யாப் , விபத்தின் போது காரை யார் இயக்கியது என்று சரிவரத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இவ்விபத்து குறித்து உண்மையான மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பஷீருக்கு ஒரு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். அவரது உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், நேரில் சென்று மலர் வளையம் வைத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் வெங்கிடராமன் கேரளாவில் நன்கு அறியப்பட்டவர். 2017ல் இடுக்கி மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்த போது, மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கட்டங்களை, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வின் எதிர்ப்பையும் மீறி அகற்றிப் பெயர் பெற்றவர். கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அவர், வேலைவாய்ப்பு துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது சர்வேயர் இயக்குநராக உள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[சினிமாவுக்கு திரும்பிய உதயநிதி](https://minnambalam.com/k/2019/08/03/7)**
**[மூன்றாகப் பிரிக்கப்படுகிறதா காஷ்மீர்?](https://minnambalam.com/k/2019/08/03/46)**
**[சர்வேஸ்வரி: யார் செய்த கொலை?](https://minnambalam.com/k/2019/08/03/24)**
**[டிஜிட்டல் திண்ணை: நீ காலை… நான் மாலை… திமுக -அதிமுக கரன்சி ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/08/02/75)**
**[வானம் கொட்டட்டும்: மணிரத்னம் சர்ப்ரைஸ் விசிட்!](https://minnambalam.com/k/2019/08/02/3)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
�,”