இ பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் காலவரையற்ற அடைப்பு போராட்டத்தை நடத்துவோம் என்று கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை கொடைக்கானல், ஊட்டிக்கு வரும் வாகனங்களுக்கு இ பாஸ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி, இ பாஸ் வழங்குவதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் இன்று (மே 4) அவசர ஆலோசனை நடத்தியது.
இதில், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அச்சங்க நிர்வாகிகள் பேட்டி அளித்தனர்.
கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கொடைக்கானல் மக்களும், வணிகர்களும் என்ன செய்வது என தெரியாமல் தவித்துகொண்டிருக்கின்றனர்.
இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து சங்கங்களும் தெரிவித்துள்ளன.
இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஹோட்டல்களில் சுற்றுலா பயணிகளுக்கு தங்க அறைகள் தர மாட்டோம், உணவு வழங்க மாட்டோம்.
தொடர்ந்து, காலவரையற்ற அடைப்பு போராட்டத்தை நடத்துவோம்.
தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
கோடை சீசனில் சுற்றுலா பயணிகளுக்கு அறை, உணவு கொடுக்கமாட்டோம் என்று கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர்கள் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா