மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொசஸ்தலை ஆற்றில் இறங்கி 300க்கும் மேற்பட்டோர் நேற்று (ஜூன் 4) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே உள்ள லட்சுமி விலாசபுரம் கொசஸ்தலை ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குவாரியில் மணல் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் மணல் எடுக்கத் தடை செய்ய வேண்டும் என்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதைதொடர்ந்து, இந்த குவாரியில் தற்காலிகமாக மணல் அள்ள நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது மணல் அள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.
மணல் குவாரியை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும் மணல் எடுத்தால் லட்சுமி விலாசபுரம், பொன்னாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றிக் குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்றும் அந்தப் புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.
புகார் தெரிவித்தும், மணல் அள்ளுவதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று கொசஸ்தலை ஆற்றில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஜேசிபி எந்திரத்தைச் சிறை பிடித்தும் போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திருத்தணி வட்டாட்சியர் நரசிம்மன் மற்றும் திருவாலங்காடு காவல் துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
�,