சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி தற்போது தமிழகச் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணியாற்றி வருகிறார். இவருக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு எந்தவித வசதிகளையும் ஏற்படுத்தி தரவில்லை என்று கூறி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் ஆகியோருக்கு எதிராக அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், நீதிமன்ற அனுமதி இல்லாமல் எந்தவித முடிவும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள நிலையில் எஸ்பி பதவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்பி ராஜேஸ்வரியிடமும், கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங்கிடமும் சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு விசாரணையில் அமைச்சர் ஒருவரின் தலையீடும், டிஜிபியின் தலையீடும் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அதிகாரி பொன்.மாணிக்கவேல், அனைத்து மாவட்டங்களில் உள்ள சிலைக்கடத்தல் வழக்குகளை, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு மாற்ற 2017இல் நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் பல மாவட்டங்களில் வழக்குகள் மாற்றப்படாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுதொடர்பாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர 3 லட்சம் சிலைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு அரசு வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை. தற்போதைய சூழலில் 21 பெண் காவலர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்குப் போதிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காததால் அவதிப்படுகின்றனர். திருச்சி சிறப்பு முகாம் அலுவலகத்துக்குத் துப்புரவுப் பணிக்காகக்கூட நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார்
சிலைக்கடத்தல் வழக்கு விசாரணைக்குத் தேவையான எட்டு ஆய்வாளர்கள், 47 உதவி ஆய்வாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். நான் சிறப்பாகப் பணியாற்றுவதைத் தடுக்கவே, நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் அவமதித்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)
**
**
[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)
**
**
[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”