அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தபிறகு, தமிழகத்தில் எப்போதும் இல்லாதளவுக்கு தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் ரெய்டு, அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு, அடுத்தடுத்த அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு வரபோகிறது என்ற எச்சரிக்கை, அதிகாரிகளை மிரட்டியதாக அமைச்சர் மீது வழக்கு என, சசிகலா அணியினர் மீது தாக்குதல் தொடர்வதால் ரெய்டிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அணி மாற முயற்சித்தார்கள் சில அமைச்சர்கள். அவர்களை சமாதானப்படுத்தி வருகிறார் செங்கோட்டையன்.
இந்நிலையில், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, இரு அணிகளையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து, நான் என் பொதுச்செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன் என்றும் சொன்னாராம் கட்சியைக் காப்பற்ற வேண்டி.
அதன் பிறகுதான் அரசியல் பிரமுகரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டிய நபர் ஒருவர்தான், இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்கு திவாகரும் சம்மதம் தெரிவித்து செயல்படுகிறாராம்.
தினகரன் அரசியலை விட்டு விலகி ஆன்மீகப் பாதையில் பயணிக்க இருக்கிறார். தினகரன் கைதை தடுக்க பலரை சந்தித்து முயற்சித்துள்ளார். ஆனால் அனைவரும் கைவிரித்துள்ளார்கள். சிறையில் உள்ள சசிகலாவும், தினகரனை சந்திக்க மறுத்துவிட்டாராம். இந்நிலையில், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இரு அணியும் ஒன்று சேருங்கள், திமுக ஆட்சிக்கு வருவதற்கு, மத்தியில் உள்ளவர்களுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லையாம். அதனால் நீங்களே ஒன்று சேருங்கள். இல்லை என்றால் வீணாக ஆட்சிதான் கலையும் என்றாராம். அதை அப்படியே சசிகலா கவனத்துக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கும் எடுத்துச் சென்றுள்ளார்.
மத்தியில் உள்ளவர்கள் விருப்பம், ஓ.பி.எஸ்-க்கு முதல்வர் பதவி, எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர், வன்னியர் ஒருவருக்கு கட்சிப் பதவி கொடுங்கள் என்பதுதான்.
தம்பிதுரை நேற்று ஏப்ரல் 17ஆம் தேதி, இரண்டு முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ஓ.பி.எஸ்-க்கு முதல்வர் பதவியை கொடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்காமல் பேசினாராம். ஓ.பி.எஸ்-க்கு முதல்வர் பதவி இல்லை என்றால், துணை முதல்வரும் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியும் கொடுக்க வேண்டும் என்று தீர்க்கமாக பேசப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை கனிந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்நிலையில், இன்று ஏப்ரல் 18ஆம் தேதி ஐ.என்.எஸ். போர்க்கப்பலில், சசிகலா அணி எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அணியை இணைப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ஐ.என்.எஸ். கப்பலில் மூச்சுவிட்டால்கூட ஆடியோ-வீடியோ பதிவாகுமாம். விபரம் தெரிந்தவர்கள் விபரமாக ஏற்பாடு செய்துள்ளார்கள், விபரம் தெரியாதவர்கள் சிக்கிக்கொண்டார்கள். கோபத்தில் வார்த்தைகள் கொட்டிவிட்டால் விபரீதம்தான் என்கிறார் கப்பல் அனுபவம் உள்ள அதிகாரி.
சசிகலா, இந்த வாரத்தில் கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறார். எந்தப் பொறுப்பும் இல்லாத சசிகலா ஆலோசனைப்படிதான் கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படும் என்கிறார்கள். வெளிப்படையான அறிவிப்புகள் ஏப்ரல் 19ஆம் தேதி மாலை அல்லது 20ஆம் தேதிக்குள், இரு அணிகள் இணையும் அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக வெளியாகலாம். யாருக்கு எந்தப் பதவி என்ற விபரமும் அறிவிக்கப்படுமாம்.�,