குடியரசுத் தலைவர், ஆளுநர், பிரதமர், முதல்வர் ஆகியோருக்கு தனித்தனி அதிகாரங்கள் உள்ளன. ஆகையால், அவரவர் எல்லைக்குள்தான் அனைவரும் இயங்க வேண்டும் என புதுச்சேரி மாநில சபாநாயகர் வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் 14.04.2017 வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் புதுச்சேரி மாநில சபாநாயகர் வைத்திலிங்கம் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ‘நிர்வாகம் சட்டம் நீதித்துறைக்கு உரிய அதிகாரங்கள் அனைத்தும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. எனவே, அனைவரும் அவரவர் எல்லையை மீறி இயங்கக் கூடாது. மீறினால் போலீஸ் ராஜ்ஜியம்போல் நம் நாடு மாறிவிடும். குடியரசுத் தலைவர், ஆளுநர், பிரதமர், முதல்வர் ஆகியோருக்கு தனித்தனி அதிகாரங்கள் உள்ளன. ஆகையால் அவரவர் எல்லைக்குள்தான் அனைவரும் இயங்க வேண்டும்’ என அவர் தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமி அரசுக்கும் இடையே அதிகார மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.�,