பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 8 ஆவது தவணை நிதியுதவியைப் பிரதமர் மோடி இன்று (மே 14) விடுவித்தார்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ. 1.15 லட்சம் கோடி நிதியுதவி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், 8ஆவது தவணை நிதியைப் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று விடுவித்தார். 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,000 கோடி அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து விவசாய பயனாளிகளிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் கலந்துகொண்டார்.
பிரதமர் பேசுகையில், “விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர். விவசாயிகள் தங்கள் திருப்தியை வெளிப்படுத்தும் பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்த்திருக்கிறேன்” என்றார்.
கடந்த டிசம்பர் மாதம் 9 கோடி விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் விடுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**
�,