கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளிவைப்பு!

Published On:

| By Balaji

திமுக எம்.பி கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவர் வெற்றிபெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி அந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன், அத்தொகுதி வாக்காளர் சந்தானகுமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி முத்துராமலிங்கம் என்பவருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்குக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று (பிப்ரவரி 25) மீண்டும் விசாரணைக்கு வந்தன. வழக்குகளை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்றம் நிலுவையில் உள்ள வழக்கைச் சுட்டிக்காட்டி, கனிமொழிக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளின் விசாரணையையும், மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share