மேற்கு வங்கத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா, ராஜ்நாத் சிங் என பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்திலேயே முகாமிட்டு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிகளின் கவனமும் மேற்கு வங்கத்தின் மீது உள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாக கூறி அவர், பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. இந்த தடையை எதிர்த்து அவர் காந்தி மூர்த்தி பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 13) சொரூப் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராஜ்நாத் சிங், மம்தாவின் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டினார். தற்போது ஆணையத்தை எதிர்த்து மம்தா போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்த அவர், எங்கள் பிரதமரை பற்றி நீங்கள் (மம்தா) முட்டாள்தனமாக பேசுகிறீர்கள். நானும் முதலமைச்சராக இருந்துள்ளேன் . முதலமைச்சர் பதவியில் இருப்பவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் மம்தா பானர்ஜியின் நடத்தை ஒரு முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றதாக உள்ளது. நீங்கள் யாரையும் விட்டு வைக்க மாட்டீர்களா?
தொலைக்காட்சியில், வெடிகுண்டு செய்யும் தொழிற்சாலைகள் இங்கு உள்ளது என பார்த்தேன். அவை அரசுக்கு சொந்தமானது என நினைத்தேன். ஆனால் அவை எதிர்க்கட்சியினரை தாக்க என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். முதல்வரின் தலைமையில் குண்டுகளை தயாரிப்பது எப்படி சாத்தியமானது என்று மம்தாவை கடுமையாக தாக்கி பிரச்சாரம் செய்தார்.
**-பிரியா**
�,