தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 இருபது ஓவர் (டி20) போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று (ஆகஸ்ட் 8) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் மேயர்ஸ் 25 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஜான்சன் சார்லஸ் 12 , பூரன் 20 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர்.
சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய பிரண்டன் கிங் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என 42 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து ரோவ்மன் பவல், ஹெட்மையர் ஜோடி சேர்ந்தனர். இதில் ஹெட்மையர் 9 ரன்னில் நடையைக் கட்டினார்.
பின்னர் வந்த ரோமேரியோ ஷெப்பர்ட் பவலுடன் ஜோடி சேர்ந்தார். அதன்படி, ரோவ்மன் பவல் 19 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர் என மொத்தம் 40 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது.
பின்னர், 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.
இதில், ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் இந்த ஆட்டத்திலும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
அடுத்ததாக களம் இறங்கிய சூர்ய குமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி தங்களின் அதிரடியை வெளிக்காட்டியது.
அதன்படி, சூர்ய குமார் யாதவ் 44 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என மொத்தம் 83 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
திலக் வர்மா 49 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவருக்கு ஜோடியாக இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கி 20 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் இந்தியா 1-2 என்ற கணக்கில் தொடரை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!