பாட்டீதார் அனாமத் அந்தோலன் சமீதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் பட்டேல்(25) இடஒதுக்கீடு மற்றும் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி கடந்த 14 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் இன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பாட்டீதார் சமூகத்துக்கு இடஒதுக்கீடு மற்றும் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி பாட்டீதார் அனாமத் அந்தோலன் சமீதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் குஜராத் மாநில அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வராத நிலையில், தண்ணீர் குடிப்பதையும் அவர் நிறுத்திவிட்டார். இதனால் அவரது எடை 20 கிலோ குறைந்துள்ளது.
இந்நிலையில், உண்ணாவிரதம் 14ஆவது நாளை கடந்துள்ள நிலையில் அவரது உடல் மிக மோசமாக பாதிப்படைந்ததால் இன்று(செப்டம்பர் 7) அகமதாபாத்தில் உள்ள சோலா சிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்று மருத்துவர்கள் குழு அவரது உடல் நிலையைப் பரிசோதித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாட்டீதார் அனாமத் அந்தோலன் சமீதியின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் பானரா கூறுகையில், “ஹர்திக் உடல் பாதிக்கப்பட்டதிற்கு மாநில அரசுதான் பொறுப்பு. ஹர்திகை கொலை செய்வதற்கு மாநில அரசு திட்டம் தீட்டுகிறது. இதன் மூலம், பாஜகவின் சர்வாதிகார போக்குக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது” என்று கூறினார்.
மேலும், “ஹர்திக்கின் உடல் நிலையை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அவரின் சிறுநீரகம், இதயம் மற்றும் உடல் உறுப்புகளில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் தனியார் மருத்துவர்கள் அதை மறுத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், குஜராத் மாநில அரசு இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி நிதியுதவி அளித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.�,