உலக நாடுகளில் 57 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பரவ ஆரம்பித்த ஒமிக்ரான், ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒமிக்ரான் வைரஸ் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டாலும், அதன் பரவல் வேகமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது ஒமிக்ரான் குறித்து வெளியாகும் தகவலும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு அதன் வாராந்திர அறிக்கையில்,”ஒமிக்ரான் தொற்றின் தீவிரத்தை மதிப்பிடுவதற்கும், இதனுடைய பிறழ்வுகள் தடுப்பூசியின் பாதுகாப்பை குறைக்குமா என்பதற்கும் போதிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
டெல்டா மாறுபாட்டை விட ஒமிக்ரான் தொற்றின் தீவிரத்தன்மை சமமாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் அதிகமான மக்கள் பாதிக்கப்படும்போது, மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் இடையில் கால தாமதம் இருக்கும். தற்போதுவரை 57 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் தொற்றினால் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பிப்ரவரி மாதத்தில் உச்சத்தைத் தொடும் என்று கூறப்படும் நிலையில், ஒமிக்ரான் வைரஸ் வீரியம் குறைந்ததாக இருந்தால் ஜூன் 2022க்குள் இயல்பு நிலை ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
**-வினிதா**
�,