நெடுவாசல் போராட்டம் குறித்து, ஜெம்ஸ் லெபரட்டரீஸ் நிறுவனத்திற்கும் தமிழக அரசிற்கும் இடையே உள்ள கடித போக்குவரத்து குறித்து நாம் இன்று காலை செய்தியில் தெளிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் திமுக. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஜெம் லெபாரட்டரீஸ் மத்திய அரசிடம் அனுமதி வாங்கியுள்ளது. ஓ.என்.ஜி.சி பெயரில் உள்ள குத்தகை உரிமையை தங்கள் பெயருக்கு மாற்ற தனியார் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் குத்தகை தங்களுக்கு மாற்றித்தரப்படும் என்று நம்புவதாக ஜெம் நிறுவன அதிகாரி கூறியுள்ளார். மேலும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜெம் நிறுவனத்தின் கோரிக்கை குறித்தும் அரசு விளக்கம் கேட்டுள்ளது.
இதன்மூலம் ஜெம் நிறுவனத்துடன் தமிழக அரசு கடித தொடர்பு வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய பாஜக அரசுக்கு தமிழக அரசு துணைபோகிறாதா என்று கேள்வி எழுகிறது. மேலும் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது என முதல்வர் வாக்குறுதி அளித்தார். ஆனால் வாக்குறுதியை மீறி குத்தகை மாற்றம் தொடர்பாக ஜெம் நிறுவனத்துடன் தமிழக அரசு கடித போக்குவரத்து செய்துள்ளது. தமிழக அரசின் இந்த செயல் நெடுவாசல் விவசாயிகளுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் ஆகும். இவ்வாறு ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு அரசு துணை போகக்கூடாது என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.�,