அமைச்சர் செந்தில் பாலாஜியின் இருதய அறுவை சிகிச்சையை விமர்சனம் செய்பவர்கள் தங்களுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் தான் அதன் வலி தெரியும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 24) 103 இடங்களில் மெகா மருத்துவ சிறப்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கலைஞருக்கும் மருத்துவ துறைக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 1964-ஆம் ஆண்டு முத்துவேலர் அஞ்சுகம் தாய் சேய் நல விடுதியை தனது சொந்த செலவில் கட்டினார்.
அவருடைய ஆட்சி காலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை, கலைஞர் காப்பீடு திட்டம், வருமுன் காப்போம் திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம் என இந்தியாவிற்கே முன் மாதிரியான பல திட்டங்களை கொண்டு வந்தார். அவரது நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு 100 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 103 இடங்களில் இன்று தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை, காது, மூக்கு, தொண்டை, சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என பல துறைகளின் சார்பில் மருத்துவம் பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கண்ணொளி சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெற உள்ளது” என்றவரிடம்
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன், “செந்தில் பாலாஜி மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் இருதய அறுவை சிகிச்சையை விமர்சனம் செய்பவர்கள் தங்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தான் அதன் வலி தெரியும். செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பேர் முன்னிலையிலா அறுவை சிகிச்சை செய்ய முடியும்” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செல்வம்
ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் லஞ்சம்: காவல் ஆய்வாளர், எஸ்.ஐ மீது வழக்கு!