காற்றின் ஈரப்பதத்திலிருந்து நீர் பிரித்து தரும் வாயுஜெல் இயந்திரத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் வைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். kamal haasan demand government
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதத்திலிருந்து நீர் பிரித்து தரும் வாயுஜெல் இயந்திரத்தை கமல் பண்பாட்டு மையம் சார்பில் வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவம்பர் 7) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,
“என் பிறந்தநாள் என்பதை விட முக்கியமான நல்ல நாள். அரசியல், வியாபாரம் அனைத்தையும் கடந்து மனிதநேயம் சம்பந்தப்பட்டது. அனைத்து வரம்புகளையும் மீறி நல்லவர்கள் எல்லாம் இணைந்து செயல்படும் ஒரு நல் விழா.
அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் நான் உள்பட அனைவரும் மனிதம் சார்ந்து வந்திருக்கிறோம்.
வாயுஜெல் என்ற இயந்திரத்தை கடந்த இரண்டு வருடங்களாக ராஜ் கமல் நிறுவனத்தின் அலுவலகத்தில் வைத்து அந்த நீரை ஆரோக்கியமாக நான் பருகி வருகிறேன்.
அந்த நீர் இங்குள்ள குழந்தைகளுக்கு பயன்பட வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் போது இதை பயன்படுத்தலாம்.
இதை நான் செய்தால் இதை விட பன்மடங்கு அதிகமாக அரசு செய்து காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இதில் உள்ள நன்மைகளை புரிந்துகொண்டால் என்னை போன்றவர்கள் அரசு மருத்துவமனைகளுடன் கரம் கோர்ப்பார்கள். இந்த கருவியை தமிழர்கள் ஐஐடியில் உருவாக்கியுள்ளார்கள். மாசு இல்லாத நல்ல குடிநீரை நாம் அனைவரும் பருக முடியும். இதை ஒரு முன்மாதிரியாக அரசுக்கு பரிந்துரைக்கிறேன்.
இதை அமைச்சர்கள் மேலிடத்திற்கு எடுத்து சென்று இது போன்ற இயந்திரத்தை பல இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கமல் பண்பாட்டு மையம் மூலமாக செயல்படுத்துகிறோம். kamal haasan demand government
கட்சிக்கு சம்பந்தமில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த ஏற்பாடு. அரசு இதனை தொடர்ந்து செய்ய என்ன உதவி வேண்டுமானாலும் செய்வோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?: அமைச்சர் பதில்!
ஹைட்ரோகார்பன் கிணறுகள்… ராமநாதபுரமே பாலைவனமாக மாறும்: வேல்முருகன்