நாடாளுமன்றத்தில் வரலாற்றில் முதன்முறையாக இன்று (டிசம்பர் 18) ஒரேநாளில் 78 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், கடந்த வாரம் பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் நுழைந்த சிலர் வண்ண புகை குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த விவகாரத்தில் இதுவரை 6 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாடளுமன்ற பாதுகாப்பு தொடர்பாக பெரும் அச்சம் எழுந்த நிலையில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கையை வெளியிடக் கோரி கடந்த 14ஆம் தேதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் திமுகவைச் சேர்ந்த கனிமொழி, காங்கிரஸை சேர்ந்த ஜோதிமணி உள்ளிட்ட 13 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து எதிக்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதும் மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போஸ்டர்களுடன் அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவையில் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!
இதனையடுத்து நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி அமளியில் ஈடுபட்ட எம்.பிக்களின் இடைநீக்கம் தொடர்பான தீர்மானத்தை முன்வைத்தார். அது குரல் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி 33 எம்.பி.க்களை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர சபாநாயகர் மேடையில் ஏறியதற்காக காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், ஜெயக்குமார், மற்றும் அப்துல் கலீக் ஆகிய 3 பேர் சிறப்புரிமைக் குழுவின் அறிக்கை வரும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 30 எம்.பி.க்களில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, துணைத் தலைவர் கவுரவ் கோகோய், திருநாவுக்கரசர், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, சி.என்.அண்ணாதுரை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சவுகதா ராய், கல்யாண் பானர்ஜி ஆகியோர் அடங்குவர்.
மக்களவையில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்களின் பட்டியல்!
மாநிலங்களவையில் 45 பேர் சஸ்பெண்ட்!
இதே போன்று மாநிலங்களவையில் நாடாளுமன்ற விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களான பிரமோத் திவாரி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், ரஜனி அசோக்ராவ் பாட்டீல் உள்ளிட்ட 45 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
70 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் ஒரேநாளில் 78 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், அதுகுறித்து விளக்கம் கேட்பவர்களை சஸ்பெண்ட் செய்து ஜனநாயகத்தை படுகொலை செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வெள்ளத்தில் தென் மாவட்டங்கள்: மோடியிடம் நேரம் கேட்கும் ஸ்டாலின்
நிவாரண பணிகளுக்கு மேலும் 4 அமைச்சர்கள் நியமனம்… நெல்லை விரைந்தார் உதயநிதி!
“போர், ரத்தம், விரோதம்” : சலார் புதிய ட்ரெய்லர்!