குறுகிய காலக்கட்டத்துக்குள் மிகப்பெரிய இடத்தை பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதுபோன்று, லேட்டஸ்ட் ஹிட்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படம் தான்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு படங்கள் இந்த வருட ரிலீஸை டார்கெட் செய்து உருவாகி வருகிறது. அதாவது, நெல்சன் இயக்கத்தில் டாக்டர் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’.இதில் டாக்டர் படமானது ரம்ஜானுக்கு வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். அனிருத் இசையில் வெளியான மூன்று சிங்கிள்களும் செம ஹிட்.
இரண்டாவது, ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் புனைவுத் திரைப்படமாக ‘அயலான்’ உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. கிராஃபிக்ஸ் பணிகள் இருப்பதால் நீண்ட நாட்கள் போஸ்ட் புரொடக்ஷன் மட்டும் எடுத்துக் கொள்கின்றன. எப்படியும், இந்த வருட இறுதிக்குள் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.
தற்பொழுது, அட்லீயின் உதவியாளர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரகனி, எஸ் ஜே.சூர்யா , சிவாங்கி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘டான்’ படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடல்புடலாக நடந்துவருகிறது. முழுக்க முழுக்க காமெடி ஆக்ஷன் சினிமாவாக இருக்குமாம். கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.
டான் படத்துக்குப் பிறகு, சிவகார்த்திகேயனை இயக்க இருக்கும் இயக்குநர் குறித்த தகவல் கசிந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியன்2 , ராம்சரண் படம், அந்நியன் பாலிவுட் ரீமேக் என அடுத்த ஒரு வருடம் ஷங்கர் பிஸி. இந்நிலையில், புதிய திருப்பமாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக இருக்காம்.
சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு கதையொன்றைக் கூறியிருக்கிறார் கே.வி.ஆனந்த். அந்தக் கதையும் தயாரிப்புத் தரப்புக்கு பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அதோடு, நடிகராக சிவகார்த்திகேயனையும் பரிந்துரைத்திருக்கிறார். அதன்படி, சிவகார்த்திகேயனிடமும் பேச்சுவார்த்தைப் போய் கொண்டிருக்காம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 2009ல் வெளியான ‘அயன்’ மற்றும் 2011ல் வெளியான ‘கோ’ படங்கள் மிகப்பெரிய ஹிட். அதன்பிறகு, சூர்யா நடிப்பில் மாற்றான், தனுஷூக்கு அநேகன், சேதுபதிக்கு ‘கவண்’ மற்றும் சூர்யாவுக்கு ‘காப்பான்’ படங்களை இயக்கினார். கடைசி நான்கு படங்களுமே பெரிதாக வசூலில் சோபிக்கவில்லை. சிவகார்த்திகேயன் படம் எப்படியிருக்கப் போவதென்பதைப் பொறுத்திருந்துப் பார்க்கலாம்.
**- தீரன்**
�,