லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்சினிமாவில் அறிமுகமாகி 30 வருடங்களை கடந்துள்ள நடிகர் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்திரைப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ’தளபதி 68’ படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இதனை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தமிழ் திரையுலகில் அவதாரம் எடுக்க உள்ளார்.
அவர் லண்டனில் திரைக்கதை எழுதுவது குறித்து படித்து வந்த நிலையில், தற்போது ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஜேசன் சஞ்சய்யை இயக்குனராக அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் பெருமிதம் கொள்கிறோம்.
திரையுலகில் அவரது தந்தையின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அவருக்கு வெற்றியும் மனநிறைவும் நிறைந்த வாழ்க்கை அமைய வாழ்த்துகிறோம்!” என்று லைகா தெரிவித்துள்ளது.
We are beyond excited 🤩 & proud 😌 to introduce #JasonSanjay in his Directorial Debut 🎬 We wish him a career filled with success & contentment 🤗 carrying forward the legacy! 🌟#LycaProductionsNext #JasonSanjayDirectorialDebut @SureshChandraa @DoneChannel1 @gkmtamilkumaran… pic.twitter.com/wkqGRMgriN
— Lyca Productions (@LycaProductions) August 28, 2023
மேலும் தனது நிறுவனத்துடன் அவர் கையெழுத்திட்ட புகைப்படங்களையும் லைகா வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தின் மூலம் திரையுலகில் தயாரிப்பு நிறுவனமாக லைகா அறிமுகமானது. அதன்பின்னர் கோலிவுட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்களைத் தயாரித்திருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தினை தயாரிக்க உள்ளது லைகா.
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் எப்போது?: நீதிபதி உத்தரவு!