மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்ற ஆர்டிஐ கேள்விக்கு ”தேதி சம்பந்தமான தகவல்கள் தெரியாது’’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய பாஜக அரசு கடந்த 2015ம் ஆண்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் தொடங்கப்படும் என்று அறிவித்தது.
அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள்!
அதற்கு 3 ஆண்டுகள் கழித்து 2018-ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்க்கு இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. அதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு மதுரை எய்ம்ஸுக்கு பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டினார்.
அப்போது அடுத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனினும் பிரதமர் அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் தாண்டியும் 90 சதவீதம் நிறைவடைந்த சுற்றுச்சுவரை தவிர மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
வெளிநாட்டுடன் கடன் ஒப்பந்தம்!
அதன்பின்னர் இரண்டரை ஆண்டுகள் கழித்து ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச்சில் செய்யப்பட்டது.
நாட்டில் உள்ள அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் தமிழகத்தின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நிறுவனத்திடம் கடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்நிலையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தற்போது அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முடியும் தேதி தெரியும்; தொடங்கும் தேதி தெரியாது!
இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், ”தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள் அளித்த பதிலில், கட்டுமான பணிகளை மேற்பார்வையிடும் நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், அக்டோபர் 2026ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியும் என்று கூறியுள்ளது.
அதே வேளையில் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பது சம்பந்தமான தகவல்கள் இல்லை என்றும் பதில் தெரிவித்துள்ளது.
இதனால் எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்குவதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
“நட்டாவுக்கு கல்லறை” : தெலங்கானாவில் அநாகரீக அரசியலின் உச்சம்!
பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமா!