திமுக செயல்தலைவர் ஸ்டாலினும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் மதுரை விமான நிலையத்தில் நேற்று திடீரென சந்தித்துக் கொண்டனர்.
சில மாதங்களுக்கு முன்பு வரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட தேசத்துரோக வழக்கில்தான் தான் சிறை சென்றதாகவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து திமுக எதிர்ப்பு மனநிலையிலேயே இருந்துவந்தார். இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் மலேசியாவுக்குச் சென்றிருந்த வைகோவுக்கு, அந்நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. விமான நிலையத்திலேயே தங்கவைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இதற்கு எதிராக திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அண்ணன் வைகோ என்று குறிப்பிட்டு மலேசிய அரசுக்கு எதிராக தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
தொடர்ந்து உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வெடுக்கும் திமுக தலைவர் கருணாநிதியை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது ஸ்டாலினின் கையைப் பிடித்து தனது மகிழ்ச்சியைப் பரிமாறினார். தொடர்ந்து நடைபெற்ற முரசொலி பவள விழாவில் கலந்துகொண்ட வைகோ, “அன்பு உடன்பிறப்புகளுக்கு என்ற கலைஞரின் குரல் மீண்டும் ஒலிக்கும் என்று தெரிவித்திருந்தார். அதற்குப் பின்பு திமுக எந்தவிதத்திலும் விமர்சித்துப் பேசவில்லை.
இந்தச் சூழ்நிலையில் பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிவடையவுள்ள நிலையில், இது திமுக சார்பில் கறுப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.
மதுரையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஸ்டாலின், நேற்றிரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார். இதே சமயத்தில் சென்னை செல்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு ஸ்டாலினும், வைகோவும் திடீரென சந்தித்துக்கொண்டனர். இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்தனர். பிறகு, சிறிது நேரம் உரையாடிய பின் விடைபெற்றனர். சந்திப்பில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் வைகோ விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
நேற்றைய தினம் நடைபெற்ற கருணாநிதி – மோடி சந்திப்பை அரசியல் நாகரிகம் எனவும், கலைஞரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் வைகோ கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
�,”