கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சலின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 17ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இரண்டு செவிலியர் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் ஒருவர், சிகிச்சை பலன்றி இறந்துவரும் சூழல் கேரளாவில் நிலவுகிறது. இதனால் கேரள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு நிபா வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. தற்போது 50 சதவீத மருந்துகள் மட்டுமே வந்துள்ளன. மேலும் தேவைப்பட்டால் கூடுதல் மருந்து வரவழைக்கப்படும் என்றும் கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் ரசின் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று(ஜூன் 1) உயிரிழந்தார். இதனால் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.�,