�
கொரோனா பாதிப்பில் மற்ற நாடுகளை இந்தியா முந்தி வரும் நிலையில் 10ஆவது இடத்திலிருந்து 9 ஆவது இடத்துக்கு இன்று நகர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இன்று (மே 29) மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 7,466 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 7,000 க்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவது, கடந்த இரு மாதங்களில் இதுவே முதன் முறையாகும். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. 71,106 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். அதுபோன்று ஒரே நாளில் 175 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரையிலான பலி எண்ணிக்கை 4,706ஆக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசை பொறுத்தவரை, உலக நாடுகளிலேயே இந்தியாவில் தான் உயிரிழப்பு விகிதம் குறைவாக இருப்பதாக கூறுகிறது. ஆனால் இது சீனா எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாகும், சீனாவில் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படாத நிலையில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,634 ஆக உள்ளது.
அதுபோன்று பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்கனவே சீனா, ஈரானை முந்தி 10ஆவது இடத்துக்கு நகர்ந்த நிலையில், இன்று துருக்கியை பின்னுக்குத் தள்ளி 9ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது இந்தியா.
கொரோனா பாதிப்பில், முதல் 8 இடங்களில் , அமெரிக்கா (17,68,461), பிரேசில் (4,38,812), ரஷ்யா(3,79,051), ஸ்பெயின் (2,84,986), இங்கிலாந்து (2,69,127), இத்தாலி (2,31,732), பிரான்ஸ்(1,86,238), ஜெர்மனி(1,82,452) ஆகிய நாடுகள் உள்ளன.
**-கவிபிரியா**�,