போலீசாரின் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டநடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் பிரகாஷ் காரத் ஆய்வு மேற்கொண்டார்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு தமிழகம் முழுவதும் போராடினர். மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று தமிழக அரசு கேட்டுக்கொண்டும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்றப்படும்வரையில் தங்களது போராட்டம் தொடருமென்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசால் தலையிட முடியாதென்று பிரதமர் கூறிவிட்டார். அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக அரசு சார்பில் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சட்டமன்றக் கூட்டத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் அவசரச் சட்டம் ஒரு கண்துடைப்பு வேலை என்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிரந்தரச் சட்டமே வேண்டுமென்று போராட்டத்தை கைவிட மறுத்தனர். அதையடுத்து, மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். சில மாணவர்கள் மெரினா கடற்கரையிலிருந்து வெளியேற மறுத்து கடலை நோக்கி ஓடி கடலில் நின்றுகொண்டு போராட்டத்தை நடத்தினர். நடுக்குப்பத்தில் கடந்த 23ஆம் தேதி போராட்டக்காரர்களை கலைப்பதாகக் கூறி காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
அங்கிருந்த மீன் மார்க்கெட்டும் சூறையாடப்பட்டது. மேலும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதாகவும், பெண்களை ஆபாசமாக பேசியதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் போலீசாரே வாகனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு தீ வைப்பது மற்றும் கடைகளை சூறையாடியது உள்ளிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வன்முறை வெறியாட்டத்துக்குள்ளான நெடுகுப்பம் பகுதியை மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இன்று பார்வையிட்டனர். அப்போது, அவர்களிடம் காவல்துறையினர் தங்களிடம் ஆபாச வார்த்தைகள் பேசி தங்களை தாக்கியதாகவும், காவல்துறையினர் தங்களது பொருட்களை சூறையாடியதாகவும் அந்தப் பகுதியிலிருந்த பெண்கள் குற்றம்சாட்டினார். மேலும் தங்கள் வாழ்வாதாரமான மீன் அங்காடிக்கு காவல்துறையினர் தீ வைத்துவிட்டனர் என்றும் முறையிட்டனர். நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் அவர்கள் விபரமாக பிரகாஷ் காரத் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து, பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்முறைக்குள்ளான நடுக்குப்பம் பகுதியில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். வன்முறைக்கு காரணமான போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.�,