மத்திய அரசு ரிசர்வ் வங்கியைத் தன் கைப்பிடிக்குள் கொண்டுவர முனைவதற்குக் காரணம் ஒரு லட்சம் கோடிதான் என்ற தகவலை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரம், இது தொடர்பான ஆலோசனைகளுக்காக ஒவ்வொரு மாநிலமாக சென்று வருகிறார். அந்த வகையில் நேற்று (நவம்பர் 9) அஸ்ஸாம் மாநிலத் தலைநகர் கவுஹாத்திக்கு சென்றார் சிதம்பரம்.
அங்கே காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம், பணமதிப்பழிப்பு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி விவகாரம் ஆகியவை பற்றி விரிவாகப் பேசினார்.
“இந்திய ரிசர்வ் வங்கியைத் தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள மத்திய அரசு தீவிரமாக முயல்வது இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு பேரழிவையே ஏற்படுத்தும்.
2016 நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பழிப்பு கொண்டுவரப்பட்ட நிலையில் அதற்கு முன் தினமான நவம்பர் 7ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் கூட்டத்தில், பண மதிப்பழிப்பினை நியாயப்படுத்தி மத்திய அரசு முன் வைத்த காரணங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டன. இது ரிசர்வ் வங்கியின் குறிப்புகளில் உள்ளது. ரிசர்வ் வங்கியின் மறுப்பையும் மீறிதான் பணமதிப்பழிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு தேசத்தின் மத்திய வங்கி என்ற தன்னாட்சி அமைப்பு பற்றிய எந்தப் புரிதலும் இல்லாததோடு மரியாதையும் வைத்திருக்கவில்லை” என்று சாடினார்.
மேலும் ப.சிதம்பரம் பேசும்போது, “மத்திய அரசுக்கு இப்போதைய உடனடித் தேவை ரிசர்வ் வங்கியின் நிதி இருப்புகளிலிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாயை எடுத்துத் தன் கையில் வைக்க வேண்டும் என்பதுதான். நிதிப் பற்றாக்குறை இலக்கினைச் சமாளிக்கவும், அடுத்த வருடம் தேர்தல் வருடம் என்பதால் அது தொடர்பான செலவினங்களைச் சமாளிக்கவும் மத்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இப்போது தேவை. இதற்கெல்லாம் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அனுமதிக்காத நிலையில்தான் மத்திய அரசு ரிசர்வ் வங்கியைக் கபளீகரம் செய்யத் துடிக்கிறது.” என்று குறிப்பிட்டிருக்கிறார் ப.சிதம்பரம்.�,