துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண், குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவர் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷுக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்குத் துப்பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை இருந்திருக்கிறது.
இந்த நிலையில் குண்டு நிரப்பப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கியைத் தன் நெஞ்சில் நிறுத்தியபடி, டிரிக்கரில் கையை வைத்துக்கொண்டு செல்ஃபி எடுத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக டிரிக்கரில் கை அழுத்தியதால் குண்டு வெடித்தது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சாய்ந்து கிடந்தார் ராதிகா.
இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பேசியுள்ள ராஜேஷ் குப்தா, “பஞ்சாயத்து தேர்தல் காரணமாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கியை என் மகன் வீட்டுக்கு வாங்கி வந்தார். அப்போது மருமகள் அதைக் கொண்டு செல்ஃபி எடுக்கும்போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.
அவர் துப்பாக்கியுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் அவர்கள் காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில் ராதிகாவின் தந்தை இந்த மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
**-ராஜ்**
.�,