2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து சீனாவுக்கான திராட்சை ஏற்றுமதி 200 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பாக விற்பனையாளர்கள் – வாங்குவோர்களின் சந்திப்பு மும்பையில் நவம்பர் 27ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் திராட்சை ஏற்றுமதியை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு திராட்சை ஏற்றுமதியை, 2020ஆம் ஆண்டுக்குள் 200 விழுக்காடு அதிகரிக்கும் நோக்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. தற்போது இந்தியாவிலிருந்து சீனாவுக்கு 600 மெட்ரிக் டன் அளவு திராட்சை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் பாபன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், “சீனாவில் சந்தை வாய்ப்பை அதிகரிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். திராட்சை உற்பத்தி செய்யும் மாநில விவசாயிகளுடனும், இந்திய வர்த்தக தொழில் துறை அமைச்சகத்துடனும் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். திராட்சைகளின் தரத்தை மேம்படுத்த தேசிய ஆராய்ச்சி மையத்துடன் நாங்கள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
இந்த நிகழ்வில் சீனாவின் தரப்பிலிருந்து சீன இறக்குமதி உணவுப் பொருட்கள் சங்கத்தைச் சேர்ந்த ஜோங் லிஷான் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “சீனாவில் திராட்சைக்கு அதிகரித்து வரும் தேவையை ஈடுசெய்யும் விதமாக இந்தியாவிலிருந்து இறக்குமதியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். தற்போது சிலி மற்றும் அமெரிக்காவிலிருந்து அதிகளவில் திராட்சையை இறக்குமதி செய்து வருகிறோம். அதைக் காட்டிலும் கூடுதலான அளவில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யவுள்ளோம்” என்றார்.�,