நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுவதாக தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், உரிய அனுமதி இல்லாமல் சாலையோரங்களில் பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதிகாரிகள் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைப்பவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. தமிழகம் முழுவதும் பேனர்களை வைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று (நவம்பர் 29) நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது, “எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு விழாவுக்காக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டன. குறிப்பாகச் சென்னையில் 500க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதற்கு யார் அனுமதி வழங்கினார்கள், எவ்வளவு பேர் இதுவரை அனுமதி பெற்று பேனர்கள் வைத்துள்ளனர் என்ற தகவல்கள் எதுவும் அதிகாரிகளிடம் இல்லை. ஆனால், நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்றுவதில் அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனமாகச் செயல்படுகின்றனர்” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இனிமேல் பேனர் வைப்பவர்களை மட்டுமல்ல, அதற்கு பண உதவி செய்து உதவுபவர்களும் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இவ்வழக்கு வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.�,