ஆளில்லா சிறிய ரக விமானங்கள் இந்தியாவின் லாஜிஸ்டிக் வசதிகளை மேம்படுத்தும் என்று ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சரான ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பொருட்கள் விநியோகத்துக்கு ட்ரோன் எனப்படும் ஆளில்லாத சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்துவது இந்தியாவில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகிறது. செப்டம்பர் 18ஆம் தேதி ஜெயந்த் சின்ஹா இதுபற்றிக் கூறுகையில், “ஆன்லைன் விற்பனைத் துறை இந்தியாவில் ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டது. தற்போது ஆளில்லாத சிறிய ரக விமானங்களை விநியோகத்துக்குப் பயன்படுத்துவதால் இந்தியாவில் லாஜிஸ்டிக் திறன்கள் மேம்படும். இந்த முயற்சியால் பொருட்களை விநியோகம் செய்வது எளிமையாகும்.
ஆளில்லாத சிறிய ரக விமானங்களை அறிமுகம் செய்வதற்கான புதிய விதிகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் வகுத்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அண்மைக்காலமாக ஆளில்லாத சிறிய ரக விமானங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆளில்லாத சிறிய ரக விமானப் போக்குவரத்துச் சந்தையின் மதிப்பு சர்வதேச அளவில் 10 பில்லியன் டாலராக உள்ளது. இந்தியாவிலும் இதற்கான தேவை வலுவாக உள்ளது. பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவில் இச்சந்தை வளர்ச்சியடையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.�,