Nபட்டாசுகளை எப்படி வெடிப்பது?

public

இந்தியா முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டம் களைகட்டியிருக்கிறது. பட்டாசு வெடிக்கப் பல கெடுபிடிகள், பல விதிமுறைகள் விதிக்கப்பட்டபோதும் பட்டாசுகள் அனைத்து இடங்களிலும் முழங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தீ விபத்தின்றி தீபாவளியைக் கொண்டாட அறிவுறுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தீபஒளித் திருநாளான தீபாவளி இம்மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இத்தீபாவளித் திருநாளினை தீ விபத்தில்லாத் திருநாளாகக் கொண்டாட இத்துறை கீழ்காண் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பள்ளிகள், பொது இடங்கள், குடிசைப் பகுதிகள் போன்ற இடங்களில் தீத்தடுப்புக் குழுக்கள் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் குழுக்களால் பட்டாசு மற்றும் தீப்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பிரசுரங்கள், போஸ்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

உடனுக்குடன் தீவிபத்துக்களை அணைக்கும் நோக்கில், சென்னை மாநகரில் தீவிபத்து ஏற்படக்கூடிய 34 இடங்கள் கண்டறியப்பட்டு ஒரு நீர்தாங்கி வண்டிக் குழுவினருடன், குடிநீர் வாரியத் தண்ணீர் லாரியும் அக்டோபர் 16 முதல் 24 மணிநேரமும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மேற்காண் ஏற்பாட்டுடன் சென்னை மாநகரில் உள்ள 38 தீயணைப்பு நிலையங்களிலும் பணியாளர்கள் ஊர்திகளுடன் தயார் நிலையில் உள்ளனர். அனைத்துத் தீயணைப்பு ஊர்திகளும் வான்தந்தி வாயிலாகக் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இத்தீபாவளித் திருநாளினை விபத்தில்லாத் திருநாளாகக் கொண்டாடப் பொதுமக்கள் செய்யக்கூடியவை / செய்யக்கூடாதவை என்ன என்பதைப் பார்ப்போம்.

பட்டாசுகளை முறையாகத் தீ உரிமம் பெற்ற கடைகளிலேயே வாங்க வேண்டும். பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்பொழுது இறுக்கமான பருத்தி ஆடையை அணிய வேண்டும். பாதுகாப்பிற்காகக் காலணி மற்றும் கண்ணாடி அணிய வேண்டும்.

பட்டாசு வெடிக்கும்பொழுது ஒரு வாளி நீர் மற்றும் மணல் ஆகியவை பக்கத்தில் பாதுகாப்பிற்கு இருக்கட்டும். பட்டாசுப் பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளைக் கவனமாக படிக்க வேண்டும். ராக்கெட்டுகள் பற்றவைக்கும் பொழுது ஜன்னல் அல்லது கதவை நோக்கி அது செல்லாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எரிந்து முடிந்த பட்டாசு, கம்பி மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றைத் தண்ணீர் உள்ள வாளியிலோ அல்லது உலர்ந்த மண்ணிலோ போட வேண்டும். நீண்ட ஊதுவர்த்திகளைக் கொண்டு பட்டாசுகளை வெடியுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது முகத்தினைத் தள்ளி வைத்துக்கொள்ள வேண்டும். ஆடையில் தீப்பற்றினால் ஓடாதீர்கள். உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள். நின்று கீழே படுத்து உருளுங்கள். பட்டாசு வெடிக்கும்பொழுது முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் மற்றும் விலங்குகளை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பெரியவர்களின் மேற்பார்வை இல்லாமல் சிறுவர்களைப் பட்டாசு மற்றும் மத்தாப்புக்களைக் கொளுத்த அனுமதிக்காதீர்கள். வெடிக்காத பட்டாசு, மத்தாப்புகளை மீண்டும் வெடிக்காதீர்கள் வீட்டிற்கு அல்லது கட்டிடங்களுக்கு மிக அருகில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். பட்டாசுகள், ராக்கெட்டுகள், பூச்சட்டிகள் (புஸ்வானம்) ஆட்டம் பாம் போன்றவற்றைக் கைகளில் வைத்து வெடிக்காதீர்கள். பட்டாசுகளைக் காலை 06.00 மணிக்கு முன்னரும், இரவு 10.00 மணிக்குப் பின்னரும் வெடிக்காதீர்கள்.

பட்டாசு மற்றும் வெடிகளை வெடிக்கத் தீக்குச்சிகளைப் பயன்படுத்தாதீர்கள். தீக்காயத்தில் ஒட்டியுள்ள ஆடையினை அகற்றாதீர்கள். தீக்காயத்தின் மீது எண்ணெய் மற்றும் இங்க் போன்றவற்றினைக் கொட்ட வேண்டாம். பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு அருகிலோ, முன்னரோ பட்டாசு வெடிக்கக் கூடாது பெட்ரோல் பங்குகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மூடிய பெட்டிகளில் / பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டுக் கொளுத்தி வெடிக்காதீர்கள். கூட்டம் நிறைந்த தெருக்கள், சாலைகளில் வெடிக்காதீர்கள். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *