இந்தியாவின் பன்னிரண்டு முக்கியத் துறைமுகங்களின் திறனை அதிகப்படுத்துவதற்காக 20,535 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டில் 39 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாகக் கப்பல் துறை அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
112 விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியே இந்த 39 திறன் மேம்பாட்டுத் திட்டங்களாகும். 112 விரிவாக்கத் திட்டங்களுக்கான முதலீட்டுத் தொகை 69,636 கோடி ரூபாய் ஆகும். துறைமுகங்களின் திறனை ஆண்டுக்கு 3,500 மில்லியன் டன்னாக உயர்த்துவதற்காக இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் படி, 2025ஆம் ஆண்டுக்குள் துறைமுகங்களின் சரக்குப் போக்குவரத்தை ஆண்டுக்கு 2,500 மில்லியன் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கப்பல் துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “112 பெருந்திட்டங்களில் 20,535 கோடி ரூபாய் மதிப்பிலான 39 திட்டங்கள் தற்போதைய நிலையில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன” என்று கூறினார். 6,920 கோடி ரூபாய் மதிப்பிலான 15 திட்டங்கள் ஏற்கெனவே நிறைவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 5,485 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களுக்கான ஏலப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
கண்ட்லா, மும்பை, ஜவகர்லால் நேரு துறைமுகம், மர்மகோவா, மங்களூர், கொச்சின், சென்னை, எண்ணூர், வா.ஊ.சிதம்பரனார் துறைமுகம் (தூத்துக்குடி), விசாகப்பட்டிணம், பாரதீப், கொல்கத்தா ஆகிய 12 துறைமுகங்களும் இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களாக உள்ளன. மேலும், வதவான் (மகாராஷ்டிரா), இணயம் (தமிழ்நாடு), தாஜ்பூர் (மேற்கு வங்கம்), பாரதீப் வெளித் துறைமுகம் (ஒடிசா), சீர்காழி (தமிழ்நாடு), பெலகெரி (கர்நாடகா) ஆகிய ஆறு இடங்களிலும் துறைமுகங்களை அமைப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,