பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையும் அவற்றின் பயன்பாடும் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளைத் தடை செய்த மத்திய அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்கத் தொடங்கின. சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கி மக்கள் நகரத் தொடங்கினர். பணமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் அரசின் இலக்குக்கு ஏதுவாக, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அரசு சார்பிலும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் அரசு மேற்கொண்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, நாட்டில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாத நிறைவில் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் செலுத்தவேண்டிய பாக்கித் தொகை ரூ.59,900 கோடி. இது 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத நிறைவுப் பாக்கித் தொகையான ரூ.43,200 கோடியை விட 39 சதவிகிதம் கூடுதலாகும். அதற்கு முந்தைய 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த பாக்கித் தொகையானது 77.4 சதவிகிதம் கூடுதலாகும். பாக்கித் தொகை அல்லது பயன்பாடு அதிகரித்ததைப் போலவே கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது, புழக்கத்தில் இருந்த மொத்த கிரெட் கார்டுகளின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 23.39 மில்லியனிலிருந்து 2017 ஆகஸ்ட் மாதத்தில் 32.65 மில்லியனாக அதிகரித்துள்ளது.�,