தினசரி போடப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் இந்தியா அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8.70 கோடி. இன்று காலை 7 மணி வரை இந்தியாவில் 8,70,77,474 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன.
கொரோனா தடுப்பூசியின் 81வது நாளான நேற்று மட்டும் 33,37,601 தடுப்பூசிகள் போடப்பட்டன.
உலகில் வேகமாக தடுப்பூசிகள் போடும் நாடுகளில், நாளொன்றுக்கு சராசரியாக 30,93,861 தடுப்பூசிகள் என்ற அளவுடன் இந்தியா அமெரிக்காவை மிஞ்சிவிட்டது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 29,98,533 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 30,93,861 ஆக உள்ளது. அதன்படி, தினசரி தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்தில் இந்தியாவும், இரண்டாமிடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் (3,71,446) உள்ளன.
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.70 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி, மத்தியபிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 55,469 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8,43,473 ஆகும். தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. கொரோனா பரவல் குறித்த நிலவரம், தடுப்பூசி நிலவரம் குறித்து பிரதமர் கடந்த 4 ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, நாளை பிரதமர் மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
அமெரிக்காவில் 58 நாட்களிலேயே கொரோனா தடுப்பூசி 10 கோடி பேருக்கு போடப்பட்டதையடுத்து, தற்போது 20 கோடி பேர் என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வருகின்ற 19 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
�,