“பெரியாரின் கொள்கைகளை சட்டமாக்கியவர் கலைஞர்” என நடிகர் கார்த்தி கலைஞரின் சாதனைகளை நினைவுகூர்ந்துள்ளார்.
கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிவக்குமார், சூர்யா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். எதிர்பாராதவிதமாக அவர் மரணம் அடைந்த போது ராஜாஜி அரங்கில் அவரது உடலுக்கு இருவரும் அஞ்சலி செலுத்தினர்.
படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த கார்த்தி இன்று கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் இல்லம் சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த கார்த்தி, “கலைஞர் சென்ற தலைமுறையின் மிகப்பெரிய ஜாம்பவான். அவரைப் பற்றி நிறையச் சொல்லலாம். நான் எதுவும் புதிதாக சொல்லிவிட முடியாது. இட ஒதுக்கீடு அவர் வாங்கிக் கொடுக்கவில்லையென்றால் சின்ன சின்ன ஊர்களில் இருந்து இவ்வளவு பேர் படித்து வந்திருக்க முடியாது. பெண்களுக்குச் சம உரிமை வாங்கிக் கொடுத்தது கலைஞர் ஐயா தான். பெரியாரின் கொள்கைகளை ஆட்சிக்கு வந்து சட்டமாக்கியது கலைஞர் தான். என் அப்பாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர். நடிகர் சங்கத்தில் வெற்றி பெற்று அவரைச் சந்திக்கும் போது ஒரு புத்தகம் கொடுத்தார். அவரைப் பார்க்கச் செல்லும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருந்து ஒவ்வொரு முறையும் விசாரிப்பார். இந்த இடத்தில் நிற்கும் போதே கலக்கமாகத் தான் இருக்கிறது. ஸ்டாலின் சாருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கழகத்தாருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.�,