அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பில், ‘ஊழியர்களைப் பாதிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். மாநில அரசின் எட்டாவது ஊதியக் குழு மாற்றங்களை, உடனடியாக கொண்டுவர வேண்டும். ஏழாவது ஊதியக் குழுவில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும். வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஜி.எஸ்.டி என்ற முறையில் சேவை வரி வசூலிக்கக் கூடாது, பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். விரைவில் ஜாக்டோ-ஜியோ தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும். இல்லை என்றால் திட்டமிட்டபடி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.
கடந்த 3 ஆம் தேதி அரசுடனான முதற்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். உயர் நீதிமன்ற தடையையும், அரசின் அறிவுரையையும் மீறி போராட்டத்தை நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.
முன்னதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த இளங்கோ, கணேசன் ஆகியோர் நீக்கப்பட்டு, சுப்பிரமணியன் மற்றும் மாயவன் ஆகியோர் புதிய ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனால் ஜாக்டோ-ஜியோ 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது.இதில் இளங்கோ, கணேசன் தலைமையில் செயல்படும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்து உள்ளதாகவும், விரைவில் போராட்ட அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தினால் பள்ளிகளில் வகுப்புகள் நடத்துவது பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது
கிராமப்புற மற்றும் நகர்ப்புற பின்தங்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில், சத்துணவு வழங்கப்படுவது பாதிக்கக்கூடாது எனத் தலைமை ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். காலாண்டு தேர்வில், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் பி.எட் கல்லூரி மாணவர்கள் மூலம் பாடம் நடத்த வேண்டும். பி.எட்., படிக்கும் மாணவர்கள், பள்ளிகளுக்குச் சென்று பாடம் எடுக்கத் தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை ஆட்சியர் அலுவலகத்தை நாளை (செப்டம்பர், 12) காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.�,