தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்ல அரசுப் பேருந்துகளில் இன்று முன்பதிவு தொடங்கியது.
பண்டிகைக் காலம் வந்தாலே சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளோருக்குச் சொந்த ஊருக்குச் செல்வதே பெரும் போராட்டமாக அமைந்துவிடுகிறது. ரயில், பேருந்து எனக் கூட்டத்தில் முண்டியடித்து குழந்தைகளுடன் பயணிப்பது பெரும் சவாலாக உள்ளது. அதேநேரம் பண்டிகை நேரத்தில் தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வும் அழுத்த, பண்டிகை கொண்டாட்டத்தைப் பதம் பார்த்துவிடுகிறது. இதனாலே பேருந்து, ரயில் முன்பதிவுகள் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே முடிந்துவிடுகின்றன.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெளியூர்களில் வசிப்பவர்கள் வெள்ளிக்கிழமையே (அக்டோபர் 25) சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டு வருகின்றனர். தென்மாவட்டங்களுக்கு வழக்கமாகச் செல்லும் விரைவு ரயில்களின் முன்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்டது. இருப்பினும் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அரசுப் பேருந்துகளின் முன்பதிவுக்காக மக்கள் காத்திருந்தனர். அரசு விரைவுப் பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த வகையில், அக்டோபர் 25ஆம் தேதிக்கான முன்பதிவு[www.tnstc.in](http://www.tnstc.in/TNSTCOnline/) என்ற இணையதளத்தில் இன்று (ஆகஸ்ட் 27) தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 300 கிமீக்கு அதிகமான தொலைவுள்ள இடங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சொகுசு, ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை, திருப்பூர், சேலம், திருப்பதி, பெங்களூரு, கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 1,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், தீபாவளி பண்டிகையின்போது எவ்வளவு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது என்பது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்களுடன் அடுத்த இரண்டு வாரங்களில் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாகவும், அதன் பிறகு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அரசுப் பேருந்துகளில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 538 பேர் முன்பதிவு செய்திருந்தனர். சென்னையில் மட்டும் 46 ஆயிரத்து 706 பேர் முன்பதிவு செய்திருந்தனர். மேலும் தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்து 567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், கடந்த ஆண்டு தீபாவளியை ஒட்டிய 10 நாள்களில் 5.77 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாகப் போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர்.
**
மேலும் படிக்க
**
**[ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?](https://minnambalam.com/k/2019/08/26/28)**
**[டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்](https://minnambalam.com/k/2019/08/26/52)**
**[ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!](https://minnambalam.com/k/2019/08/25/42)**
**[நிதி நெருக்கடியில் லைகா!](https://minnambalam.com/k/2019/08/26/14)**
**[ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!](https://minnambalam.com/k/2019/08/26/31)**
�,”