கபில் சிபல் காட்டிய டிரெய்லர்: உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தேர்தலில் வெற்றி!
சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷனின் (SCBA) புதிய தலைவராக மூத்த வழக்கறிஞரும், சமாஜ் வாதி கட்சி ராஜ்யசபா எம்.பி.யுமான கபில் சிபல் நேற்று ( மே 16) இரவு பத்து மணியளவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று மாலையே தொடங்கி இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனின் தலைவராக போட்டியிட்ட தற்போதைய துணைத் தலைவர் பிரதீப் ராயை தோற்கடித்திருக்கிறார் கபில் சிபல். சிபலுக்கு சிபல் 1066 வாக்குகளும், ராய் 689 வாக்குகளும், தற்போதைய தலைவர் அதிஷ் அகர்வாலா மூன்றாம் இடம் பெற்று 307 வாக்குகளும் பெற்றனர். வாக்காளர் பட்டியலில் உள்ள 2850 பேர்களில், தேர்தலில் மொத்தம் 2330 வழக்கறிஞர்கள் வாக்களித்தனர்.
உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கபில் சிபல் போட்டியிடுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி தேதியான மே 9 ஆம் தேதிக்கு முதல் நாளான மே 8 ஆம் தேதிதான் தான் போட்டியிடப் போவதையே அறிவித்தார் கபில் சிபல்.
கபில் சிபல் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்ததுமே தேர்தல் களம் மாறிவிட்டது.
கபில் சிபல் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் பதவிக்கு சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியிட்டு வென்றிருக்கிறார்.
உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவராக கபில் சிபல் வெற்றி பெற்ற பிறகு பேசும்போது.
“எங்கள் சித்தாந்தம் இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பது, . சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதாகும். உலக வரலாற்றில் ஒவ்வொரு அரசாங்கமும் எப்போதும் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதை மீறுகிறது. குடிமக்களைப் பாதுகாக்க வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அதுதான் ஒரே சித்தாந்தம், அதில் அரசியலைக் கொண்டு வரவேண்டாம் என்று நினைக்கிறேன். நான் கொண்டு வந்ததில்லை. அப்படி நடக்காமல் இருக்க நான் உத்தேசித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ உங்களுக்குத் தெரியும். நான் இந்த நீதிமன்றத்தில் 50 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் இந்த நீதிமன்றத்தைத் திருமணம் செய்திருக்கிறேன். நீதிமன்றம் செழிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த நிறுவனத்தின் மீது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.
கபில் சிபல் கடைசியாக 2001-02ல் எஸ்சிபிஏ தலைவராக பணியாற்றினார். அதற்கு முன் இரண்டு முறை – 1995-1996, 1997-1998 ஆண்டுகளிலும் பணியாற்றியிருக்கிறார்.
கபில் சிபல் நீதிமன்றத்துக்குள் அரசியலை அனுமதிக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தாலும் அவரது இந்த வெற்றி அரசியலில் மிக வேகமாக எதிரொலித்துள்ளது.
கபில் சிபலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ,
“சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவராக கபில் சிபல் சற்றுமுன்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தாராளவாத, மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும். வெளிச்செல்லும் பிரதமரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்… தேசிய அளவில் மிக விரைவில் நிகழும் மாற்றங்களுக்கான டிரெய்லர். விரைவில் இந்த (முன்னாள்) ஆட்சிக்கு சட்டப்பூர்வமாக தாளம் போட்டவர்களும் சியர்ஸ் லீடர்களும் அதிர்ச்சி அடைய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் “வாழ்த்துகள் சார்… இது கிரேட் நியூஸ்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கபில் சிபலுக்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. கபில் வெற்றியை வலது சாரிகள் ஆபத்து ஆபத்து என விமரிசித்து வரும் நிலையில்…
“இந்தத் தேர்தலில் கபில் சிபல் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாஜக கடுமையாக முயற்சித்தது, நிறைய பணத்தையும் செலவு செய்தது. ஆனால் கபில் சிபல் மிக பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார், அதனால்தான் அவர்கள் கதறுகிறார்கள். கபில் சிபல் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார்” என்று கபில் சிபலுக்கு ஆதரவான கருத்துகளும் சமூக தளங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல்… 9 ’மாவட்டங்கள்’ எதிர்ப்பு! என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?
குளுகுளு சென்னை: அப்டேட் குமாரு